Skip to main content

வாருங்கள் முழுமை அடையலாம்

 

வாருங்கள்  முழுமை அடையலாம்.

  அகத்தீ அமைப்பு  தனி மனித வாழ்விற்கும் (இல்லறம்/அகவாழ்வு) பொது வாழ்விற்கும் (அரசியல்/புறவாழ்வு) ஒரு சேர முக்கியத்துவம் அளித்து வருகிறது.

இக்கட்டுரையில்  இல்லற  வாழ்வியலுக்கான  ஒரு  முழு  முகாந்திரத்தை காண உள்ளோம்.

 கடந்த  சில  மாதங்களாக  நன்நுண்மி (GEMs) பயன்பாட்டு பயிற்சி , நஞ்சில்லா உணவு குறித்த விழிப்புணர்வு , வாழ்வியல் சிந்தனைகள் என சில பயிற்சிகள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டுள்ளன. அதன் பயனும், நோக்கமும்  நன்றாக உள்ளது. அதனடிப்படையில்  ஒரு  மனிதனின்  வாழ்விற்குத் தேவையான அத்துனை  பகுதிகளையும் முழுமையான  பயிற்சிகளாக வடிவமைத்து நம்மிடையே பகிர்ந்து கொள்ள வேண்டும்.

உதாரணத்திற்கு:-

Ø  நஞ்சில்லா உணவு

Ø  மருத்துவம்

Ø  தினசரி  பயன்படுத்தப்படும்  பொருட்களை  தயாரிக்கும்  அறிவு

Ø  யோகா

Ø  சட்ட அறிவு  என நம் வாழ்வியலுக்குத் தேவையான  அனைத்தையும் சீரான கால  இடைவெளியில்  பயிற்சியாக  அளித்தால்  அது நம் நோக்கத்தை  கூர்மையாக்கும்  என்பதில்  நமக்கு  இரு வேறு கருத்தில்லை.

இவைப்  போன்ற  வாழ்வியல் பயிற்சிகளைப்  பலர்  பல்வேறு  இடங்களில் அளிக்கலாம். ஆனால்  அவற்றை  அங்கொன்றும்  இங்கொன்றுமாக  சென்று கற்க வேண்டும்.  இவை  அனைத்தையும்  முழுத்தொகுப்பாக  வடிவமைத்து அவற்றை  நம் பகுதியில்  விரிவு படுத்தினால்  நன்மை பயக்கும் .

  ஒருவேளை  நம்மிடம்  உள்ள  வளங்கள்,  சௌகரியங்கள் , தொழில்நுட்பங்களை திடீரெனெ நீக்கிவிட்டால்  நாம் சுதாரித்துக்கொண்டு  தற்சார்பு  வாழ்வியலை கையில்  எடுத்து  கொள்ள  வேண்டும். அதற்கு  முதலில்  நாம்  அதை  கற்க வேண்டும்.

 

 

 

அவற்றில் சில...

(1) உணவு:-

நஞ்சில்லா  உணவு  தானியங்கள், அவை கிடைக்கும் இடங்கள், அதனை உற்பத்தி  செய்பவரின்  தொடர்புகள், அவற்றை கையாளும் முறை போன்றவற்றை  நாம்  அறிந்து  வைத்து  கொள்ள வேண்டும்.

 

(2) உணவு உற்பத்தி:-

உணவு  உண்டபின்  நமக்கு  கிடைக்கும்  உணவு  கழிவுகளை  உரமாக  மாற்றி மாடித்தோட்டம் / வீட்டுத்தோட்டம்  அமைத்து  நமக்கான  காய்கறிகளை மட்டுமாவது  உருவாக்குவதற்கான  பயிற்சி பெற வேண்டும். 

அவற்றிற்கு தேவையான உபகரணங்கள் / திட்டமிடல் / நாட்டு விதைகளை பகிர்ந்து கொள்ளுதல் அவசியம்.

 

(3) இயற்கை எரிவாயு:-

உணவை சமைக்க தற்போது எரிவாயு உருளை மற்றும் மின்சார அடுப்புகளை  மட்டுமே  நம்பியுள்ளோம். ஆனால் உணவு கழிவுகளைப்  பயன்படுத்தி  எரிவாயு  தயாரிக்கலாம் என்றும்; அதனை வீட்டிலேயே  பெட்டி  போன்ற  வடிவில்  எளிமையாக  கையாளலாம் என்பதை தோழர் ஜெகதீஷ் சாத்தியமாக்கி உள்ளார்.

 

(4) சமைக்காத உணவு:-

இயற்கை  எரிவாயுவிலும்  இடர்பாடு  கண்டால்  சமைக்காமலே  ருசியான பல்வேறு  உணவுகளை  தயாரித்து  வரும்  படையல் சிவா  அவர்களின் பயிற்சி  நமக்கு  உதவும்.

 

 

(5) உடை:-  

“தூரிகை” / ”துலா” - போன்ற அமைப்புகள் கதர் குறித்த விழிப்புணர்வையும் அதன் பயன்பாட்டையும் பயிற்ச்சியின் மூலம் அளித்து வருகின்றன.

 

(6) இருப்பிடம்:-

மரபு கட்டுமானங்களின் முக்கியத்துவத்தையும் அதன் உறுதித்தன்மை குறித்தும் தோழர்.படிமை பாலா , தோழர்.பரத் போன்றோர் பயிற்சியின் மூலம் அளித்து வருகின்றனர்.  

 

(7) யோகா மற்றும்  மனவளக்கலை:-

யோகாவின்  பல்வேறு  நிலைகளில்  நம்மால்  முடிந்ததை  செய்ய கற்றுக்கொள்ள  வேண்டும்.  மனமும்  உடலும்  சீராக  இருக்க  குரு-யோகா அமைப்பின்  பசுபதி தோழர் அளித்து வரும் யோக பயிற்சி முறைகளை கற்கலாம்.

 

(8) மருத்துவம்:-

நல்ல உணவிலும், உடற்பயிற்சியிலும் கூடுமானவரையில் நோயை விரட்டி விடலாம். அதையும் மீறி ஏற்படும் நோய்க்கு சிகிச்சை அளித்தே தீர வேண்டும். தொடு சிகிச்சை முறையை பயன்படுத்திக்கொள்ளலாம் என பாரதி தோழர்  கூறினார். ஆனால் நோயின் தீவிரத்திற்கு ஏற்ப தரமான நவீன மருத்துவத்தையும் / சித்தாவையும் பயன்படுத்திகொள்ள  வேண்டும்.  

 

(9) உயிரி நொதி:-    

தினசரி  நாம்  பயன்படுத்தும்  ரசாயன  சுத்தப்படுத்திகளுக்கு  மாற்றாக இஸ்மாயில்  அண்ணனால்  அளிக்கப்படும்  பயிற்சியின்  மூலம்  தயாரிக்கப்படும்  உயிரி நொதி-சுத்தப்படுத்தியை  பயன்படுத்தலாம். அதனை  குளிக்கவும் , துணி  துவைக்கவும்  பயன்படுத்த முடியும் என்பது அதன் சிறப்பு.

 

(10) சோப்பு, சீயக்காய் தூள், பற்பொடி, அணையாடை:-

மேற்கூறிய உயிரி நொதி மனநிறைவு  அளிக்காத  பட்சத்தில்  குறைவான வேதிப்பொருட்களையும்  நிறைவான  இயற்கை  பொருட்களையும்  கொண்டு நமக்கு  தேவையான வழலை கட்டி சலவை கட்டி மற்றும் மற்ற பொருட்களை   நாமே  தயாரித்துக் கொள்ளலாம். அலுவலகம் செல்பவராக  இருந்தால்  நம்மில்  நாம்  பண்டமாற்றிக்  கொள்ளலாம். 

 

(11) குழந்தைகளை கையாளும் விதம்:-

சிறார்களுக்கான  களத்தை  அமைத்து  அவர்களை  ஆசிரியர்களாக்கி  நாம் அவர்களிடம்  கற்றுக்கொள்வதே  சிறார்களம் என நாம் எண்ணுகிறோம். அவர்களுக்கான  பயிற்சிகளை  நிபுணர்களைக்  கொண்டு  அமைத்து  தருவது நமது கடமை. அவ்வகையில்  காஞ்சனா தோழரும், பாரதி தோழரும், மற்ற தோழர்களும் தங்களால் இயன்றவற்றை  நடத்தி  வருவது  நமது பலம்.

 

(12) கலை  மற்றும்  இலக்கிய  ஆளுமைப் பயிற்சி:-

ஓவியம் , கைவினைப்பொருட்கள், புத்தக வாசிப்பு, நாடக பட்டறை , பொம்மலாட்டம்,  பறை இசை   போன்ற  பொழுதுபோக்கு  மற்றும்  பொழுதாக்க  பயிற்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

 

(13) முக்கிய நியமனங்கள்:-

Ø  முதிர்ச்சி  அடைந்த லாப நோக்கற்ற மருத்துவர்,

Ø  நுட்பமிக்க லாப நோக்கற்ற சட்ட ஆலோசகர்,

Ø  சிறந்த உளவியலாளர்,

Ø  மூத்த பொறியாளர்,

Ø  சான்றோர் பெருமக்களை அவரவர்களின் துறைக்கேற்ப நம் அமைப்பில்  பொறுப்புகளை  உருவாக்கி  பங்களிக்க  வேண்டலாம்.

இவற்றைத் தவிர பொருளாதார சிக்கல்களான கல்வி / கடன் சுமை / பண இழப்பு, திருமண பந்தங்கள்  மற்றும்  முதியோர்களை  கையாளுதல் போன்றவற்றில்  இருக்கும்  நடைமுறை  சிக்கல்களை  அணுகுவது  குறித்து கலந்துரையாடலாம்.

 இவை  போன்ற  வாழ்வியல்  பயிற்சிகள்  ஓரளவிற்கு பயன்  தரும்  என நாம் நம்புகிறோம். இவற்றை  சரியான  கால இடைவெளியில்  முறையாக  பயிற்சி அளித்தால் நமது தற்சார்பு வாழ்க்கைச் சீராக இருக்கும்.

போதும்  என்ற  மன  நிலையில்  இயற்கையான  வாழ்வியலைத்  தேடி நம்மிடம்  வருபவர்களை இத்தகைய முழுத்தொகுப்பினாலான பயிற்சிகள்   அவர்களை   நிச்சயமாக  முழுமை அடைந்த மனநிலைக்கு இட்டுச்செல்லும்   என்பது  நமது   நம்பிக்கை.

நன்றி வணக்கம்..

 

 

 

 

 

 

 

 

 

 

                              

Comments