அகத் தீ திணை வாழ்வியல்: ஏரிக்கரைக் கலந்துரையாடல் இடம்: சிட்லப்பாக்கம் ஏரிக்கரை நேரம், நாள்: காலை 7 மணி, ஞாயிறு, 17 செப்டம்பர், 2023 கலந்துரையாடல் பொருள் பற்றிப் பேசியவர்: பேராசிரியர் நிர்மல் செல்வமணி உரையைத் தொகுத்து வரைந்தவர்: தோழர் காஞ்சனா ஞாயிற்றுக்கிழமை 17/ 9/23 அன்று ஐயா நிர்மல் செல்வமணி அவர்களுடன் சிட்லபாக்கம் ஏரிக்கரையில் நடந்த உரையாடலின் தொகுப்பு. நமது காலத்தில் நாம் விரும்பித் தேடுகின்றவைகளைப் பற்றி நமக்கு எடுத்துச் சொல்ல நம்மிடையே உள்ள மிகப்பெரிய ஓர் ஆளுமை நிர்மல் ஐயா அவர்கள். அவர்களை அழைத்து வந்ததற்கு பாரதி தோழருக்கு நன்றி. திணை வாழ்வியலே அன்றைய கலந்துரையாடலுக்கு ஐயா எடுத்துக்கொண்ட பொருள். திணை என்றால் என்ன என்பதை அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் விளக்கிச் சொன்னார். “இணை” என்பதே திணையின் அடிப்படை என்றும் “இணை” என்றால் இசையில் ச-ப சுர உறவு என்றும் கணவன்-மனைவி உறவு என்றும் விளக்கினார். (பாரதி- வைஷ்ணவி தோழர் இணை ஏற்பு விழா எனத் தம் திருமண ஆண்டு விழாவைச் சரியாகக் குறிப்பிட்டுள்ளனர் என நிர்மல் ஐயா பாரதியைப் பாராட்டினார்). நிலமும் பொழுதும் மனிதனும் அனைத்து உயிரிகளும், தெய...